சில்லறை பாக்கியை மணியார்டரில் அனுப்பிய அரசு பஸ் டிப்போ
நெல்லை: பயணியின் 50 ரூபாய் பாக்கிப் பணத்தை மணி ஆர்டரில் அனுப்பி வைத்து அசத்தியுள்ளது சங்கரன்கோவில் அரசுப் பேருந்து டிப்போ நிர்வாகம்.
நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கடந்த வாரம் நெல்லையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு அரசு பஸ்சில் சென்றார்.
டிக்கெட் கட்டணத்துக்காக கண்டக்டரிடம் 100 ரூபாயை நீட்டினார். டிக்கெட் கட்டணம் ரூ.17.50 போக மீதி ரூ.32.50ஐ கொடுத்த கண்டக்டர் பாக்கி 50 ரூபாயை பிறகு தருவதாக கூறியதுடன் அதை டிக்கெட்டின் பின்புறம் எழுதி மாரியப்பனிடம் கொடுத்தார்.
சங்கரன்கோவில் பஸ்நிலையத்திற்கு சென்றதும் கண்டக்டரிடம் மீதி பணத்தை வாங்காமல் மறதியில் மாரியப்பன் சென்று விட்டார். கண்டக்டரும் பணி முடிந்து சென்று விட்டார். பின்னர் ஞாபகம் வந்ததும் ஓடிவந்த மாரியப்பன் பஸ்சில் வேறு கண்டக்டர் இருந்ததை கண்டார்.
உடனே பஸ்சின் நம்பர், தடம் எண் போன்றவற்றை குறித்து கொண்ட மாரியப்பன், தன்னிடம் கண்டக்டர் கொடுத்த டிக்கெட்டின் ஜெராக்ஸ் நகல் ஆகியவற்றுடன் அரசு போக்குவரத்து கழக சங்கரன்கோவில் கிளை மேலாளருக்கு கடிதம் எழுதினார்.
கடிதம் குறித்து கிளை மேலாளர் கண்ணன் விசாரணை நடத்தினார். விசாரணையில் பாக்கி தர வேண்டியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து பாக்கி பணமான ரூ.50ஐ மாரியப்பனுக்கு மணியார்டர் மூலம் அனுப்பி வைத்தார் கண்ணன்.