மோடிக்கு ஜெயலலிதா, இல.கணேசன் வாழ்த்து
சென்னை: குஜராத் சட்டசபைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாஜக வெற்றி முகத்தில் இருக்கும் செய்தி வெளியானவுடன் ஜெயலலிதா, மோடிக்கு போன் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பினார். அதில், உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றி, இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினருக்கு பெரும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
தாங்கள் இன்னும் அனைத்தையும் இழந்து விடவில்லை. அதிகார வெறியர்களிடம் நாடு சிக்கி விடாது என்ற நிம்மதி அவர்களுக்குப் பிறந்துள்ளது.
உங்களது தலைமையில், குஜராத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றியால், குஜராத் மட்டுமல்லாத நாடு முழுமையும் பெரும் வளர்ச்சியைப் பெறும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தேசியவாதத்திற்கு வெற்றி - இல.கணேசன்
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சென்னையில் உள்ள பாஜக தலைமைக் கழக அலுவலகம் முன்பு பாஜக தொண்டர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
பின்னர் மாநிலத் தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்து அனுப்பி உள்ளோம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக தேசியவாதம் போரிட்டு வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒருவருக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.
குஜராத் வாக்காளர்களுக்கும், குறிப்பாக அங்குள்ள தமிழ்பேசும் மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். காங்கிரஸ் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து வாக்குகளை பெற முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. வளர்ச்சி திட்டங்கள் மக்களை கவர்ந்துவிடும் என்ற பயத்தில் மக்களை திசை திருப்ப தரக்குறைவாக மரண வியாபாரி என்று நரேந்திர மோடியை விமர்சனம் செய்தார்கள்.
காங்கிரசின் இன்னொரு தலைவர் இந்துக்களை இந்து தீவிரவாதிகள் என்று விமர்சித்தார். இவர்களின் இந்த பிரசாரம் தான் மக்களின் ஆத்திரத்தை அதிமாக்கி காங்கிரசுக்கு மரண அடியை கொடுத்துள்ளது. இதனால் மீண்டும் மோடி வெற்றிக் கனியை பறித்து விட்டார் என்றார் இல.கணேசன்.