சபரிமலையில் பக்தர் வெள்ளம் - பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று ஐய்யப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நெருங்கி விட்டது. வருகிற 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் சபரிமலையில் பெரும் பக்தர் கூட்டம் காணப்படுகிறது.
சன்னிதானம் முதல் பம்பை, அச்சன்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பக்தர்கள் வெள்ளமாக காணப்படுகிறது.
18ம் படி ஏறி சாமி தரிசனம் செய்வதற்காக நிற்கும் பக்தர்கள் கூட்டம் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்கிறது. பல மணி நேரம் காத்திருந்துதான் 18ம் படி ஏறும் வாய்ப்பு கிடைக்கிறது.
மணிக்கணக்கில் காத்துக் கிடக்க நேரிட்டபோதும் கூட ஐயனை தரிசிக்க பக்தர்கள் சற்றும் சளைக்காமல் சரண கோஷம் எழுப்பியபடி காத்திருந்து ஐப்பனை தரிசிக்கின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், சன்னிதானத்தின் நடை திறப்பு நேரம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. இதுவரை பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்பட்டு வந்த கோவில் நடை தற்போது 2 மணிக்கு மூடப்படுகிறது. அதேபோல இரவு 11 மணிக்குப் பதில் 11.30 மணி வரை நடை திறந்திருக்கிறது.
தங்க அங்கி ஊர்வலம்:
இதற்கிடையே, ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலிலிருந்து தங்க அங்கி ஊர்வலம் நேற்று தொடங்கியது. இதை நூற்றுக்கணக்கணக்கான பக்தர்கள் கண்டு வணங்கினர்.
கணபதி ஹோம பூஜை முடிந்தவுடன், தங்க அங்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. திருவாங்கூர் தேவஸ்தான உறுப்பினர் சுமதி குட்டி அம்மா, முன்னாள் எம்.எல்.ஏ மாலேத் சரளாதேவி, தேவஸ்வம் போர்டு சிறப்பு ஆணையர் ராஜேந்திரன் நாயர், தலைமைப் பொறியாளர் ராஜகோபால், துணை ஆணையர் சரஸ்வதி குஞ்சம்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
420 பவுன் மதிப்புடைய தங்க அங்கி, கடந்த 1973ம் ஆண்டு அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ சித்திரைத்திருநாள் பலராம வர்மாவால் ஐயப்பனுக்கு காணிக்கையாக்கப்பட்டது.
மண்டல பூஜையன்று இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு சார்த்தப்படும்.
டிசம்பர் 26ம் தேதி தங்க அங்கி ஊர்வலம் பம்பையை அடையும். அங்கிருந்து அய்யப்ப சேவா சங்கத் தொண்டர்களால் தலைமேல் வைத்தபடி சன்னிதானத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
தங்க அங்கி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.