சானியாவுக்கு சிகிச்சை தரக் கூடாது: டாக்டருக்கு மிரட்டல்
ஹைதராபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஜி.கே.ரெட்டிக்கு, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் உ.பியிலிருந்து நான்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.
டென்னிஸ் இளம்புயல் சானியா மிர்ஸா அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஆரம்பத்தில் அவரது உடை குறித்து பெரும் சர்ச்சை கிளப்பப்பட்டது. இடையில் கற்பு குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார் சானியா.
சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள மக்கா மசூதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சானியா கலந்து கொண்டார். அதுவும் சர்ச்சையானது.
இந்த நிலையில் சானியா மிர்ஸாவின் டாக்டர் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார். சானியா மிர்ஸாவுக்கு சமீபத்தில் விளையாடியபோது காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி.கே.ரெட்டியிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தக் காயம் காரணமாக அவர் சமீப காலமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டாக்டர் ரெட்டிக்கு நான்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. பாகிஸ்தானிலிருந்து 2 கடிதங்களும், வங்கதேசம் மற்றும் உ.பி. மாநிலத்திலிருந்து தலா ஒரு கடிதமும் வந்துள்ளன.
இவற்றில், சானியா மிர்ஸாவால் இஸ்லாம் மதத்திற்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம், கடவுள் கொடுத்த தண்டனை. எனவே அவருக்கு சிகிச்சை தரக் கூடாது. மீறி சிகிச்சை அளித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து டாக்டர் ரெட்டி சார்பிலோ அல்லது சானியா சார்பிலோ இதுவரை போலீஸில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை.