அல் உம்மா பாஷா மகனுக்கு கல்யாணம் நடந்தது
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் மகன் சித்திக் அலிக்கு நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருமணம் நடந்தது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் மகன் சித்திக் அலி. இவரும் தந்தையுடன் சேர்த்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்திக் அலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சித்திக் அலிக்கும் அவரது உறவுக்காரப் பெண்ணான சல் சபீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று நடந்தது. கோவை போதனூரில் உள்ள சபீனாவின் வீட்டில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி சித்திக் அலி பலத்த பாதுகாப்புடன் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார்.
மேலும் பாஷாவுக்கும் பரோல் தரப்பட்டிருந்தது. தந்தையும், மகனும் நேற்று காலை 9 மணிக்கு சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டனர். திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் மாலை 6 மணிக்கு மீண்டும் இருவரும் சிறைக்குக் கொண்டு போகப்பட்டனர்.
உதவி ஆணையர் சுந்தரராஜன் தலைமையிலான போலீஸ் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது.