உலகத் தலைநகரம் லண்டன்!
லண்டன்: இங்கிலாந்தின் தலைநகர் லண்டன், உலகின் தலைநகராக மாறியுள்ளது. உலகின் பெரும் மாநகரங்களில் லண்டன் நகருக்குத்தான் உலகத் தலைநகர் என்ற கெளரவம் கிடைத்துள்ளது.
மக்கள் தொகை, வலுவான நிதிச் சந்தைகள், சுற்றுலா ஸ்தலங்கள், போக்குவரத்து வசதி, விளையாட்டு, கலை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்குவது ஆகியவை லண்டனை, உலகத் தலைநகரம் என்ற கெளரவத்தைக் தேடிக் கொடுத்துள்ளன என்று லண்டனிலிருந்து வெளியாகும் தி இண்டிபென்டன்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
லண்டனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பீஜிங் ஆகிய நகரங்களும் சர்வதேச நகரங்களாக உருவெடுத்துள்ளன.
இந்த வரிசைக்கு முன்னேற டப்ளின், எடின்பர்க், கிளாஸ்கோ ஆகிய நகரங்களும் தகுதி பெற்றுள்ளன.
லண்டன் நகரில் உள்ள பங்குச் சந்தைகள், உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும் பொருளாதார ரீதியிலும் உலக அளவில் பெரிய சக்தியாக லண்டன் உள்ளது. மேலும் உலகிலேயே யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை அதிகம் உள்ள நகரமும் லண்டன்தான்.
சர்வதேச தரத்துடன் கூடிய ஹோட்டல்கள், பல்வேறு நாட்டு பாரம்பரியம் கெடாமல் பாதுகாக்கப்படும் உணவு முறைகள் உள்ளிட்டவை லண்டனை, உலகத் தலைநகராக மாற்றியுள்ளன.
மேலும், லண்டனில் 300 உலக மொழிகள் பேசப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
3வது இடத்தில் பாரீஸ் இருக்கிறது. ஐரோப்பாவின் தலைநகரம் என்ற அந்தஸ்து பாரீஸுக்குக் கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளை தனது கையில் வைத்திருந்த லண்டன், உலக நாடுகளின் 'உண்மையான' தலைநகராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.