கூண்டுக்குள் குதித்த வாலிபரை கடித்து குதறிய புலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த புலிக் கூண்டுக்குள் திடீரென்று குதித்த பார்வையாளர் ஒருவரை புலி கடித்துக் குதறியது.
பீகார் மாநிலம் லோஹாதாவில் உயிரியல் பூங்கா உள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது. சுதிர்குமார் என்ற இளைஞர் புலிகள் அடைக்கப்பட்ட கூண்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதற்குள் வெள்ளைப் புலி ஒன்று அடைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென்று சுதிர்குமார் புலிக் கூண்டுக்குள் குதித்தார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அலறினர். கூண்டுக்குள் குதித்த சுதிரை புலி கடித்துக் குதறி விட்டது. அவர் வெகுநேரம் புலியுடன் போராடினார்.
தகவல் அறிந்த உயிரியல் பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள் விரைந்து வந்து புலிக் கூண்டுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு, புலியை வேறொரு கூண்டுக்குள் அடைத்தனர்.
புலியால் கடிபட்ட வாலிபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வனவிலங்கு அதிகாரிகள், அவர் மனநிலை சரியில்லாதவரா, எதற்காக புலிக் கூண்டுக்குள் குதித்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள மிருக காட்சி சாலையில் போட்டோ எடுக்க புலிக் கூண்டுக்குள் கையை விட்ட வாலிபரை 2 புலிகள் கடித்துக் கொன்றது நினைவிருக்கலாம்.