குளத்தில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
கடையநல்லூர் (நெல்லை): நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே தந்தையுடன் குளத்தில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். நகைத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன்கள் நடராஜன், லட்சுமி சேகர். இருவரும் கடையம் சத்திரம் பாரதி பள்ளியில் 9, 8ம் வகுப்பு படித்து வந்தனர்.
நவநீதகிருஷ்ணனின் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. இதில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று காலை 8.30 மணி அளவில் நவநீதன் தனது இரு மகன்கள் மற்றும் உறவினருடன் ஊரில் உள்ள வடபத்து குளத்தில் குளிக்கச் சென்றார்.
அப்போது நடராஜனும், லெட்சுமி சேகரும் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தனர். குளித்துக் கொண்டிருந்த தந்தை மற்றும் உறவினர்கள் இதை கவனிக்கவில்லை.
அனைவரும் குளித்து விட்டு கரையேறிய பின்னர் இருவரையும் காணாதது கண்டு திடுக்கிட்டனர். அதன் பிறகு குளத்தில் தேடி பார்த்தபோது அண்ணன், தம்பி இருவரும் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிறுவர்கள் உடலை கைப்பற்றி தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.