ரேஷன் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் புதிய திட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் மளிகைப் பொருட்களை, நுகர்வோர்களுக்கு டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை மாவட்ட சிவில் சப்ளைஸ் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 669 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் பொது மக்களுக்கு மஞ்சள், அரிசி, சர்க்கரை, புளி, வெந்தயம், கடுகு, சீரகம், கடலை பருப்பு, துவரம் பருப்பு, சோப்பு போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
விலை குறைவாக விற்கப்படுவதால் இவற்றை வாங்க மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட சிவில் சப்ளைஸ் நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ரேஷன் கடைக்கு சென்று மக்கள் இனி கியூவில் நின்று பொருட்கள் வாங்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களின் பெயரை எழுதி கொடுத்து விட்டு வந்தால் அந்த பொருட்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி வந்து கொடுத்து விடுவார்கள்.
இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து படிப்படியாக தமிழகம் முழுவதும் நிறைவேற்ற உள்ளதாக தெரிகிறது.