இமாச்சல் பிரதேச முதல்வராக பதவியேற்றார் தூமால்
இமாச்சல் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று காங்கிரஸிடமிருந்து ஆட்சியைப் பறித்துள்ளது.
இதையடுத்து இன்று பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதல்வராக பிரேம்குமார் தூமால் பதவியேற்றுக் கொண்டார்.
புகழ்பெற்ற ரிட்ஜ் மைதானத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே தூமாலுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆங்கிலப் பேராசிரியராக இருந்து பின்னர் அரசியலில் நுழைந்தவர் தூமால். 3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். முதல் முறையாக 1998ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றார். 2003ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்.
1971ம் ஆண்டு இமாச்சல் பிரதேசம் உருவாக்கப்பட்டது. தூமால், தற்போது அம்மாநிலத்தின் 16வது முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, சாந்தா, முக்தார் அப்பாஸ் நக்வி, பஞ்சாப் முதல்வர் பி.எஸ்.பாதல், உத்தரகாந்த் முதல்வர் பி.சி.கந்தூரி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.