சம்ஜாதா எக்ஸ்பிரஸ் மீண்டும் ஓடத் தொடங்கியது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இதனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்ஜாதா மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே துறை அறிவித்தது.
இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கியது.
இதுதொடர்பான முடிவை, பாகிஸ்தான் நாட்டு உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் எடுத்ததாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் தார் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவது குறித்து இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவின் அட்டாரி பகுதியிலிருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளிலும், லாகூரிலிருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.