அரிசி கடத்தல்காரர்கள் உதவி கலெக்டரை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடத்தல் அரிசியைப் பிடிக்க முயன்ற உதவி கலெக்டர் மீது மினி லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மினி லாரியில் அரிசி கடத்தப்படுவதாக உதவி கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவியாகுறிச்சி ரயில் கேட்டுக்கு அருகே பாஸ்கர பாண்டியன், தாசில்தார் காளமேகம் உள்ளிட்ட அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் ஒரு மினி லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள், அந்த லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினர்.
ஆனால் லாரி டிரைவர் படு வேகமாக அதிகாரிகளை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். அவர்கள் மீது மோதும் நோக்கில் அவர் லாரியை ஓட்டி வந்தார்.
இதையடுத்து சுதாரித்த அதிகாரிகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து விலகி உயிர் தப்பினர். பின்னர் தங்களது ஜீப்பில் அந்த மினி லாரியை துரத்தினர்.
சிறிது நேர துரத்தலுக்குப் பின்னர் காட்டுக்கோட்டை என்ற இடத்தில் லாரியை மறித்னர். அப்போதும் லாரி ஓட்டுநர், அதிகாரிகளின் ஜீப் மீது மோத முயன்றார். அதிலிருந்தும் அதிகாரிகள் தப்பினர்.
பின்னர் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தங்களது வண்டியை சாலையின் குறுக்கே நிறுத்தினர். இதனால் அரிசி கடத்தல்காரர்களால் தப்ப முடியாமல் போனது.
அப்படியும் கூட அந்த கும்பல் மினி லாரியை குறுக்குப் பாதையில் செலுத்த முயன்றது. ஆனால் அங்கு ஒரு கண்டெய்னர் லாரி இருந்ததால் அதில் மினி லாரி மோதியது. இதையடுத்து டிரைவர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
பின்னர் அதிகாரிகள் லாரியில் சோதனையிட்னர். அப்போது அதில் 150 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. இதன் மதிப்பு ரூ. 1.5 லட்சமாகும்.
இந்த அரிசிக் கடத்தல் குறித்து உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளன்.
உதவி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை லாரி ஏற்றிக் கொள்ள முயன்றது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை ஜனங்களுக்குப் போய்ச் சேர வேண்டிய ரேஷன் அரிசியைக் கடத்தியதோடு, அதைத் தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்லவும் முயலும் இதுபோன்ற சமூக விரோதிகளை ஒடுக்க பொடா போன்ற கடுமையான சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தாலும் தவறே இல்லை.