புத்தாண்டு: நள்ளிரவில் கோவில்களைத் திறக்க இந்து முன்னணி எதிர்ப்பு
சென்னை: புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் கோவில்களைத் திறக்க கூடாது என்று இந்து முன்னணி கூறியுள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை இதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அது எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்கும், இந்து மத பாரம்பரியத்திற்கும் விரோதமானது.
கோவில்களில் எப்போது பூஜை செய்ய வேண்டும் என்பதற்கு நேரம் காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை மீறி நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது பாவச் செயலாகும்.
இந்துக்களின் மத நம்பிக்கைப்படி நாள் என்பது சூரிய உதயத்திற்குப் பிறகுதான் தொடங்குகிறது.
எனவே இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை நள்ளிரவில் திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க அரசும், காவல்துறையும் பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து அதை கடுமையாகவும் அமல்படுத்துகின்றன. அதே போல கோவில் திறப்பு விவகாரத்திலும் இந்து மத நம்பிக்கைக்கு விரோதமாக யாரும் நடக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் முருகானந்தம்.