அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை கொலை செய்ய முயற்சி
திருநெல்வேலி: நெல்லையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேல்முருகனை அடையாளம் தெரியாத கும்பல் கொலை செய்ய முயற்சித்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்(46). அதிமுகவை சேர்ந்த இவர் கடந்த 2001ம் ஆண்டு அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர்.
தற்போது இவர் விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் மில்லில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளராகவும், அம்பாசமுத்திரம் ஒன்றிய ஜெ. பேரவை செயலாளராகவும் உள்ளார்.
நேற்று முன் தினம் சிவகாசியில் இருந்து தனது காரில் அம்பாசமுத்திரம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, அவரை அடையாளம் தெரியாத கும்பல் மன்னார்கோவில் விலக்கு ரயில்வே கேட் அருகே காரை வழிமறித்து கடப்பாறை, கட்டைகளால் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திமுக-அதிமுக தொழிற்சங்கத்துக்கு இடையே உள்ள போட்டியால் வேல்முருகனை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையடைப்பு:
வேல்முருகன் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று அதிமுகவினர் சிவந்திபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.