லாட்டரி டிக்கெட் விற்ற தந்தை-மகன் கைது
காஞ்சீபுரம்: லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்தவர் சண்முகம்(43). இவரின் மகன் பார்த்தசாரதி(21). இவர்கள் இருவரும் அண்டை மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
சமீபகாலமாக செங்கல்பட்டு பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகளவு லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில், இன்று காலையில் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகம், பார்த்தசாரதியை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் வீட்டிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.