பல்லடத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை
பல்லடம்: பல்லடத்தில் இளம் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்தவரான பொன்னுசாமி (35), பாலக்காடைச் சேர்ந்த சுனிதா (25) ஆகியோருக்கு 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பொன்னுசாமி பல்லடம் கோழிப்பண்ணையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் பல்லடத்தில் உள்ள தனது அக்காள் காந்திமதியின் வீட்டருகே மனைவி சுனிதாவுடன் குடியேறினார்.
வேலை தொடர்பாக பொன்னுசாமி வெளியூர் செல்லும் நேரங்களில் சுனிதாவுக்கு துணையாக காந்திமதி இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சுனிதாவின் கணவர் பொன்னுசாமி ஓசூருக்கும், காந்திமதி தனது மாமனார் இறந்து விட்டதால் திருச்சிக்கும் சென்று விட்டனர். இந் நிலையில் சுனிதாவின் வீட்டிற்கு அவரின் உறவினர்கள் சாந்தா, சியாமளா, தேவதாஸ் ஆகியோர் வந்தனர்.
அப்போது வீட்டுக்குள் சுனிதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டு திடுக்கிட்ட அவர்கள் சுனிதாவின் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தனர். உடனே அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடலை சோதனையிட்டபோது அவர் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சுனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த வீட்டுக்கு போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டிலிருந்து அருகில் பொன்னுசாமியின் அக்கா காந்திமதி வீட்டு வரை சென்று நின்று விட்டது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.