சிஆர்பிஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 8 பேர் பலி
லக்னோ: உ.பி மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர்.
உ.பி. மாநிலத்தின் மேற்கில் உள்ள ராம்பூர் மாவட்டத்தில், டெல்லி - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எப் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என கடந்த நவம்பர் 28ம் தேதியே உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து மாநில அரசும் சிஆர்பிஎப் முகாமின் பாதுகாப்பை அதிரிக்கும்படி அறிவுறுத்தியிருந்தது. ஆனால் முகாம் நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைளில் அலட்சியமாக இருந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 1) அதிகாலை 3 மணியளவில் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் இந்த முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் இறங்கினர்.
முகாமின் நுழைவாயிலில் உள்ள உ.பி. மாநில போலீஸ் பாதுகாப்பு வளையத்தைத் தகர்த்துக் கொண்டு தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர்.
சரமாரியாக அவர்கள் சுட்டதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் சிஆர்பிஎப் வீர்ரகள் ஆவர். மற்ற இருவரும் உ.பி. போலீஸார். பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் உயிரிழந்தார்.
மொத்தம் 15 பேர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மொராதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மோதலின்போது தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், ஒரு தீவிரவாதியைப் பிடிக்க முயன்றபோது அவன் தப்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிஆர்பிஎப் முகாமுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.