24ம் தேதி பாமக செயற்குழு-ராமதாஸ் அறிவிப்பு
வந்தவாசி: தமிழகத்தின் எதிர்காலத்தையும், பாமகவின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப் போகும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ள, பாமக செயற்குழுக் கூட்டம் ஜனவரி 24ம் தேதி நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வந்தவாசிக்கு நேற்று (ஜனவரி 1) வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாமக செயற்குழுக் கூட்டம் ஜனவரி 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெறும்.
இன்றைய நிகழ்வுகள் நாளைய தரத்ைத நிர்ணயிக்கும். அதேபோல புதுச்சேரியில் நடைபெறவுள்ள பாமக செயற்குழுக் கூட்டம் பாமகவின் வருங்காலத்தை மட்டுமல்லாமல், தமிழகத்தின் வருங்காலத்தையும் நிர்ணயிக்கும்.
அரசியல் விவகாரங்கள், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்படவுள்ளது.
சிமென்ட் இறக்குமதி குறித்து பாமகதான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 3 முறை போராட்டமும் நடத்தினோம். மீண்டும் வருகிற 7ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம்.
சிமென்ட் இறக்குமதி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கப்பலிலிருந்து கீழே இறக்குவதற்கு முன்பே பில்டர்களும், ஒப்பந்தகாரர்களும் மொத்தமாக அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
நியாய விலைக்கடைகள் மூலம் நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் சிமென்ட்டை விற்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
ரேஷன் அரிசிக் கடத்தல் குறையவே இல்லை. காலம் காலமாக அது நடந்து வருகிறது. அதைத் தடுக்க முயன்றும் பலன் இல்லை. உதவி கலெக்டரையே லாரி ஏற்றிக் கொல்ல முயல்கிறார்கள்.
ரேஷன் அரிசிக் கடத்தலைத் தடுக்க, அதன் பின்னணி குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
திமுகவுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு வழக்கம் போல தொடரும் என்று பதிலளித்தார் ராமதாஸ்.