கணவரின் கள்ளக்காதலி வீட்டுக்கு தீவைத்த பெண் கைது
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே கணவரின் கள்ளக்காதலியின் வீட்டுக்கு தீவைத்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பான்குளத்தை சேர்ந்தவர் ரஜினி. இவரது மனைவி சக்தி. நல்லூர் சிவகாமி புரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ரத்தினம்.
குறிப்பான்குளத்தில் உள்ள பீடிக்கடைக்கு ரத்தினம் தினமும் செல்வாராம். அப்போது ரத்தினத்திற்கும், ரஜினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த விவகாரம் ரஜினியின் மனைவிக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கணவரையும், ரத்தினத்தையும் அவர் கண்டித்துள்ளார். இருந்தாலும் இருவரும் கள்ளத் தொடர்பை தொடர்ந்துள்ளனர்.
இதனால் சக்தி ஆத்திரமடைந்தார். சம்பவத்தன்று சக்தி மண்ணெண்னெய் கேனுடன் நல்லூர் சென்றார். அங்கு ரத்தினத்தின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தாராம்.
இதில் வீட்டில் இருந்த பொருட்கள் கருகின. இதுபற்றி ரத்தினம் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுகந்தி வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தார். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.