கல்லூரி மாணவரை அடித்த போலீசாருக்கு மனித உரிமை நீதிமன்றம் அபராதம்
விருதுநகர்: மதுரையில் கல்லூரி மாணவரை அடித்து உதைத்த போலீசாருக்கு மனித உரிமை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தை சேர்ந்தவர் தங்க முனியாண்டியின் மகன் ரஞ்சித் குமார் (25). மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் இவர் 2003ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தனது தந்தையை பார்க்க வேனில் வந்துள்ளார்.
ரஞ்சித் வேன் கதவை திறக்கும் போது கிருஷ்ணன் கோவிலில் தலைமை காவலராக பணிபுரியும் துரைராஜ் மீது இடித்து விட்டது. இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.
ஆனால் ரஞ்சித்குமாரும் அவரது தந்தையும் தன்னை அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி தலைமை காவலர் துரைராஜ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவரது புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், விஜயகாண்டீபன் ஆகியோர் ரஞ்சித்குமாரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.
இது குறித்து ரஞ்சித்குமார் நுகர்வோர் கவுன்சில், தமிழ்நாடு மனித உரிமை ஆனையம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்ததுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை நீதிபதிகள் தங்கராஜ், மாரியப்பன் ஆகியோர் இந்த வழக்கில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தனர். மேலும், இரு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் ரூ.3,000 அபராதமும், தலைமைக் காவலருக்கு ரூ.2,000 அபராமும் விதித்து தீர்ப்பு கூறினர்.