தெரு நாய்கள் சண்டை: டென்ஷன் ஆன மதுரை கோவில் யானை!
மதுரை: தெரு நாய்களின் சண்டையால் பீதியடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை தாறுமாறாக ஓடியதால் பக்தர்கள் பீதியடைந்தனர். சுமார் ஒரு மணி நேர அட்டகாசத்திற்குப் பின்னர் யானை சகஜ நிலையை அடைந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி என்கிற 11 வயது யானை உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அம்மன், சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட விக்கிரகங்கள், வைகை நீரால்தான் தினசரி நீராட்டப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை பார்வதி யானை வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தது. தெற்கு கோபுரம் அருகே யானை வந்தபோது, தெருவில் சில நாய்கள் பயங்கர சப்தத்துடன் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்ததும் யானைக்கு பதட்டமாகி விட்டது. தும்பிக்கையை வேகமாக அங்கும் இங்கும் அசைத்தவாறு ஓடத் தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் பயந்து பதுங்கினர்.
வேகமாக ஓடிய யானை ஒரு ஹோட்டலுக்குள்ளும் புகுந்தது. இதனால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்தனர்.
பாகன் லட்சுமணன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி யானையை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். பின்னர் யானை கோவிலுக்குள் சென்றது. அதன் பிறகே பீதி தணிந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அதிகாரி ராஜா கூறுகையில், பயப்பட ஒன்றும் இல்லை. யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.