காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 மாதங்களில் தேர்தல்
காஞ்சீபுரம்: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 430 இடங்களுக்கு 3 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சில பேர் இன்னும் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. அவர்களிடம் உடனடியாக கணக்கு கேட்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகளுக்கு சட்ட நுணுக்கம் குறித்த பயிற்சி விரைவில் அளிக்கப்படும். தேர்தல் நேரத்தில் பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை விரைவில் முடிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 430 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடக்கும். இந்த தேர்தலில் முதன் முறையாக மின்னணு இயந்திரத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அப்போது காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலும் சேர்த்து நடத்தப்படும். மாவட்டத்தில் பதட்டமான இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்யுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகரன்.