இலங்கை பதட்டம்: இந்திய கடல் எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
மதுரை: இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலக முடிவெடுத்திருப்பதால் அங்கு போர் உக்கிரமடையும் என்பதால், இந்திய கடல் எல்லைப் பகுதியில் கடற்படையும், கடலோரக் காவல் படையும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை முகாம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தென் கிழக்கு கடலோரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படையும், கடற்படையும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வெகு அருகில் ராமநாதபுரம் இருப்பதால், இப்பிராந்தியத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்டபம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள கடலோரக் காவல் படை முகாம்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.
வழக்கமான ரோந்துப் பணிகள் தவிர வான் ரீதியாகவும், கடல் மார்க்கமாவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சர்வதேச எல்லைப் பகுதியில், இரண்டு கப்பல்கள், இடை மறித்துத் தாக்கும் கப்பல்கள், ஹோவர்கிராப்டுகள் ஆகியவற்றை கடலோரக் காவல் பட நிலை நிறுத்தியுள்ளது என்றார் அவர்.