பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி மலேசியா பயணம்
டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை மலேசியா செல்கிறார்.
தனது மூன்று நாள் பயணத்தின்போது, மலேசிய பாதுகாப்பு அமைச்சரும், துணைப் பிரதமருமான முகம்மது நஜீப் பின் துன் ஹஜியாப்துல் ரஸாக், வெளியுறவு அமைச்சர் அகமது சையத் ஹமீத் அல்பார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
மேலும் பிரதமர் அப்துல்லா பின் ஹாஜி அகமது படாவியையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பினாங்கு செல்கிறார். அங்கு மாகாண ஆளுநர் ஹாஜி அப்துல் ரஹ்மான் பின் ஹாஜி அப்பாஸை சந்திக்கிறார்.
அந்தோணியுடன் பாதுகாப்புத் துறை செயலாளர் விஜய் சிங், ஆலோசகர் சுந்தரம் கிருஷ்ணா, ராணுவ துணைத் தளபதி ஷா, விமானப்படை துணைத் தளபதி பிரவுன், கடற்படை துணைத் தளபதி சுஷில், வெளியுறவுத்துரை இணைச் செயலாளர் பிரேன் நந்தா ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவும் செல்கிறது.
மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மேலும் இது மலேசியாவின் 50-வது சுதந்திர தின ஆண்டும் ஆகும்.
கடந்த 1993ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், 6வது மலேசிய-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டமும் டெல்லியில் நடந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மலேசிய விமானப் படையினருக்கு இந்திய விமானப்ப டையினர், சுகோய் ரக போர் விமானப் பயிற்சியையும் கடந்த மாதம் அளித்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்துடன், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி மலேசிய விமானப் படையினருக்கு சுகோய் ரக விமானங்கள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சியை இந்தியா அளித்தது.
மலேசியாவில் தமிழர் பிரச்சினை வெடித்த பின்னர், இந்திய அமைச்சர் ஒருவர் மலேசியா செல்வது இதுவே முதல் முறை என்பதால் அந்தோணியின் பயணம் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.