பெனாசிரைக் கொன்றது 'லேசர் குண்டு'?
இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோ லேசர் பீம் (லேசர் குண்டு) பாய்ந்து உயிரிழந்ததாக பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறியுள்ளது.
மருத்துவமனையில் பெனாசிருக்கு நடந்த பரிசோதனை முடிவுகளை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் மக்ள் கட்சி எம்.பியான டாக்டர் பாபர் அவான் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பெனாசிரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மண்டை ஓடு நசுங்கி, அதனால் இருதுயத் துடிப்பு நின்று அவர் மரணமடைந்துள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் முஸ்ஸாதிக் கான் தலைமையிலான 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அவரது மரணம் குறித்த அறிக்கையைத் தயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது.
பெனாசிருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படங்கள் மூலம் தெரிய வந்த முடிவுகளின்படி, பெனாசிரின் தலையில், 2 அல்லது மூன்று சிறிய எலக்ட்ரோமேக்னட்டிக் கதிர்வீச்சு பாய்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்தே பிரதேப் பரிசோதனையோ அல்லது வேறு பரிசோதனையோ தேவையில்லை என்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்துள்ளனர்.
எனவே பெனாசிர் உடலில் பாய்ந்தது லேசர் கதிர்வீச்சு என்பது தெரிய வருகிறது.
அவரது மண்டை ஓட்டில், ஓவல் வடிவத்தில் காயம் இருந்தது. இது எக்ஸ்ரே படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
மேலும், கார் மேற்கூரை கம்பி பலமாக பட்டதால்தான் பெனாசிர் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறுவதிலும் அர்த்தம் இல்லை.
இந்த தகவல்களை நாங்கள் ஐ.நா. விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டால் அவர்கலிடம் விரிவாக தெரிவிப்போம்.
பெனாசிர் பூட்டோ மரணத்திற்கு ராணுவம் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை என்றார் அவான்.