மலேசிய அரசு மீது 'ஹிண்ட்ராப்' ஆலோசகர் உதயக்குமார் அவதூறு வழக்கு
மலேசியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி உதயக்குமார் உள்ளிட்ட ஐந்து தமிழர்கள் மீது மலேசிய அரசு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அவருக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக மலேசிய காவல்துறை, நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், மலேசிய அரசு மீதும், காவல்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் மீது உதயக்குமார் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான மனுவை இன்று (ஜனவரி 4) அவர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உதயக்குமார் சார்பில் அவரது வழக்கறிஞர் மனோகரன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். மனுவில் மலேசிய அரசு, காவல்துறை தலைவர் மூசா ஹசன், தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டாயில் ஆகியோரது பெயர்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில், எனக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவதூறான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அரசிடம் என்ன ஆதாரம் உள்ளதை என்பது விளக்க வேண்டும்.
அவதூறான புகாரைக் கூறி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியற்காக 43 மில்லியன் சிங்கப்பூர் டாலர் இழப்பீட்டைத் தர உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் உதயக்குமார்.
இந்தியர்கள் வழக்கு ஒரே வழக்காக மாற்றம்:
இதற்கிடையே, மலேசிய காவல்துறை 54 இந்தியர்கள் மீது தனித் தனியாக தொடர்ந்துள்ள வழக்கை ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் தங்களுடைய சிவில் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஹின்ட்ராப் அமைப்பின் சார்பில் தமிழர்கள் கடந்த ஆண்டு அமைதியான முறையில் பேரணி நடத்தினர்.
ஆனால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 54 தமிழர்கள் மீது சட்ட விரோதமாக கூடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் 37 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். மற்றவர்கள் வழக்கு வேறு நாளில் நடைபெறுவதாக நினைத்து கோர்ட்டில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த 54 பேர் மீதான வழக்கையும் ஒரே வழக்காக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தமிழர்கள் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.