3வது அணி குறித்து தவறான கருத்து: வரதராஜன் விளக்கம்
கன்னியாகுமரி: நான் கூறிய மூன்றாவது அணி குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வகுப்புவாதத்தை சொல்லி பாஜகவும், தவறான பொருளாதார கொள்கைகளை சொல்லி காங்கிரஸ் கட்சியும் மக்களை ஏமாற்றி வருகின்றன.
இந்த இரு கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய அணியை அமைக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் இப்போது மாற்று அணியின் தேவை ஏற்பட்டுள்ளது.
3வது அணி என்றால் திமுக, அதிமுக இல்லாத அணி என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் உயரவேண்டும் என்ற நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆளும் கட்சிகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு நிகராக வேறு எந்த கட்சியும் கிடையாது.
பாஜகவுக்கு குஜராத்தை தவிர வேறு எங்கும் செல்வாக்கு இல்லை. மாநிலங்களில் மாற்றம் இயல்பானது. அந்த வகையில்தான் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
இனி நடக்கவுள்ள ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மாநில தேர்தல்களில் பாஜக தோல்வி அடைவது உறுதி. ஆனால் எந்த கட்சியும் சாதிக்க முடியாததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாதித்துள்ளது. அது தான் மேற்குவங்கத்தை தொடர்ந்து 30 வருடங்களாக தக்கவைத்துள்ளது. இது பெரிய சாதனையாகும். இதை ஒப்பிடும்போது மோடியின் வெற்றி ஒரு வெற்றியே கிடையாது.
ஜோதிபாசுவுக்கு நிகரான வேறொரு தலைவர் இந்தியாவில் இல்லை. இவரால் தான் தொடர்ந்து 30 வருடங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சியை வழங்க முடிந்தது. தமிழகத்தில் அரிசி, மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. தற்போது ரயில், கப்பல்களிலும் கூட கடத்தல் நடக்கிறது என்றார் வரதராஜன்.