முஸ்லீம்களிடம் தஸ்லிமா மன்னிப்பு கேட்க தாஸ் முன்ஷி கோரிக்கை
மால்டா: இந்தியாவில் உள்ள முஸ்லீம்களிடம், தனது சர்ச்சைக்குரிய எழுத்துக்களுக்காக தஸ்லிம் நஸ்ரின் இரு கரங்களையும் கூப்பி, தலை வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது பல மதங்களைக் கொண்ட, பல இனங்களைக் கொண்ட நாடு. இங்கு அனைத்து மதங்களும் மதிக்கப்படுகின்றன.
எனக்கு இலக்கியம் பிடிக்கும். தஸ்லிமா நஸ்ரினின் எழுத்தை நான் வெறுக்கவில்லை. ஆனால், ஒரு மத்ததின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அவரது எழுத்துக்கள் இருந்தால், அவமதிக்கும் வகையில் இருந்தால் அதை அனுமதிக்க முடியாது.
அவரது நூலில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் தேவையற்றவை. சல்மான் ருஷ்டியின் நூல் சர்ச்சைக்குரியதாக இருந்ததால், அதை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை.
எனவே தனது சர்ச்சைக்குரிய எழுத்துக்களுக்காக இந்திய முஸ்லீம்களிடம், இரு கரம் கூப்பி, தலை வணங்கி தஸ்லிமா மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த நூலிலிருந்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும்.
மேற்கு வங்கத்திற்கு மீண்டும் தஸ்லிமா திரும்புவது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது மேற்கு வங்க அரசின் தலைவலி.
ஆனால் இந்தியாவிலோ அல்லது வேறு ஏதாவது நாட்டிலோ தஸ்லிமா தங்க விரும்புவாரேயானால், முதலில் அந்த நாட்டின் அடையாளம், தத்துவம் ஆகியவற்றை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் முன்ஷி.
மத்திய அரசின் பாதுகாப்பில் டெல்லியில் ஒரு ரகசிய இடத்தில் தஸ்லிமா தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது நண்பர்களுக்கு தஸ்லிமா அனுப்பிய கடிதத்தில், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முன்ஷி படு காட்டமாக தஸ்லிமா குறித்து கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.