மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்-மாயாவதி
டெல்லி: தனக்கு கமாண்டோ பாதுகாப்பு தராவிட்டால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வரும் 15ம் தேதிக்கு பின்னர் வாபஸ் பெறப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி எச்சரித்துள்ளார்.
மாயாவதி கூறுகையில்,
பயங்கரவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நான் தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்படலாம். ஒரு வேளை நான் கொலை செய்யப்பட்டால் அதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் முழு பொறுப்பேற்க வேண்டும். என் உயிருக்கு தொடர் மிரட்டல் இருப்பதால் எனக்கு எஸ்.பி.ஜி. படை பாதுகாப்பு வேண்டும்.
இந்த பாதுகாப்பை தரும்படி நான் பலமுறை மத்திய அரசிடம் கேட்டுவிட்டேன். ஆனால் எனக்கு பாதுகாப்பு தர மறுக்கிறார்கள். அதே சமயத்தில் என்னைக் கொல்ல நினைக்கும் அதீக் அகமதுவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கிறது. சில காங்கிரஸ் கட்சியினர் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்.
இதே நிலை நீடித்தால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சி வரும் 15ம் தேதிக்கு பின்னர் விலக்கிக் கொள்ளும் என கூறியுள்ளார்.
தனது மாநிலத்துக்கு உரிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் குஜராத், ஹிமாச்சலில் காங்கிரசின் வாக்குகளைப் பிரித்து அக் கட்சியின் படுதோல்விக்கு மாயாவதி வழி வகுத்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் 30 முதல் 35 இடங்களில் மாயாவதியின் கட்சி பெற்ற வாக்குகளால் காங்கிரஸ் தோற்றுள்ளது. ஹிமாச்சலில் பகுஜன் சமாஜ் 7 சதவீத வாக்குகளைப் பெற்றது. அங்கு 1.7 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜகவிடம் காங்கிரஸ் தோற்றது என்பது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மாயாவதி கூறியுள்ளார்.