மலேசிய பிரதமருக்கு 'ரோஸ்' - ஹிண்ட்ராப்பின் முடிவு
கோலாலம்பூர்: மலேசியாவின் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், தங்களது கோரிக்கைகளை பரிவுடன் கவனிக்குமாறு கோரும் வகையிலும், பிரதமர் அப்துல்லா அகமது படாவிக்கு 20 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொடுக்க இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி கோலாலம்பூரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கோரி இங்கிலாந்து தூதரகத்திடம் மனு கொடுக்க திரண்டிருந்தனர். ஹிண்ட்ராப் அமைப்பு இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் போராட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, சட்டவிரோதமாக கூடியது ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளைக் கைவிட வேண்டும் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் உள்பட பல்வேறு இந்திய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து 54 பேர் மீதான கொலை முயற்சி வழக்கை மட்டும் அரசு வாபஸ் பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கூடியதாக தொடரப்பட்ட வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஹிண்ட்ராப் அமைப்பு தனது போராட்டத்தை வேறு பாதைக்குத் திருப்பியுள்ளது. அதாவது மகாத்மா காந்தி போதித்த அன்பு வழிக்குத் திரும்பியுள்ளது.
அதன்படி பிப்ரவரி 16ம் தேதி மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவிக்கு 20 ஆயிரம் ரோஜாப் பூக்களை வழங்கும் நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பை ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு வேலன்டைன் ரோஜா பிரசாரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது லண்டனில் தங்கியுள்ள வேதமூர்த்தி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆயிரம் இந்தியர்கள் பிப்ரவரி 16ம் தேதி நாடாளுமன்றம் முன்பு கூடுவார்கள்.
பின்னர் ஆளுக்கு ஒரு சிவப்பு ரோஜா மற்றும் மஞ்சள் ரோஜாவை பிரதமர் படாவியிடம் வழங்குவார்கள்.
சிவப்பு ரோஜா என்பது ஹிண்ட்ராப் அமைப்பின் அன்பையும், அமைதியான போராட்டத்தையும் வெளிப்படுத்துவதாகும். மஞ்சள் ரோஜா, கைது செய்யப்பட்ட 5 ஹிண்ட்ராப் நிர்வாகிகளுக்கும் நியாயம் வேண்டும் என்பதையும், சிறுபான்மை இந்திய சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்துவதாகும்.
இது முற்றிலும் அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வு, அமைதியான கூட்டம்தான். பிரதமரிடம் ரோஜாக்களை வழங்கி எங்களது அன்பையும், கோரிக்கையையும் அமைதியான முறையில் தெரிவிக்க விரும்புகிறோம். நியாயம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
பிரதமர் இதை ஏற்றுக் கொள்வார், இந்திய சமூகத்தினரின் தேவைகளைப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்.
தமிழர்கள் வழங்கும் ரோஜாப் பூக்களை பிரதமர் நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். அல்லது பிரதிநிதியை அனுப்பி வைத்தாலும் சந்தோஷம்தான்.
பிரதமர் விரும்பினால் வேறு இடத்திற்கு இந்த நிகழ்ச்சியை மாற்றவும் ஹிண்ட்ராப் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார் வேதமூர்த்தி.