அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம்: இந்திய தேசிய லீக் விளக்கம்
சென்னை: அதிமுக கூட்டணியில்தான் நாங்கள் நீடிக்கிறோம். எங்களை கட்சியை விட்டு நீக்கியதாக கூறியுள்ள இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் சுலைமானைத்தான் நாங்கள் ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கி விட்டோம் என இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பஷீர் அகமது கூறியுள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சி தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் சுலைமான், தமிழ் மாநிலத் தலைவர் பஷீர் அகமது உள்ளிட்ட நிர்வாகிகளை கூண்டோடு நீக்கி விட்டதாக அறிவித்தார். மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து லீக் விலகுவதாகவும் அறிவித்தார்.
ஆனால் அத்தகவலை இன்று பஷீர் அகமது மறுத்தார். அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை. நாங்கள் தொடர்ந்து கூட்டணியில்தான் உள்ளோம். சுலைமான் கூறியது தவறான தகவல்.
உண்மையில் கட்சி விரோத நடவடிக்கைக்காக, புதுச்சேரியில் டிசம்பர் 1ம் தேதி நடந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில் சுலைமான்தான் நீக்கப்பட்டார். பொதுக் குழு உறுப்பினர்கள் 640 பேரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எனவே எங்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூற சுலைமானுக்கு தகுதி இல்லை.
முஸ்லீம் சிறுபான்மையினரின் முழு ஆதரவும், இந்திய தேசிய லீக் கட்சியின் முழு ஆதரவும் அதிமுகவுக்கு தொடருகிறது. அதில் எந்த மாற்றமும், குழப்பமும் இல்லை என்றார் அவர்.
பேட்டியின்போது கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் காதரும் உடன் இருந்தார்.