இந்தியத் தொழிலாளர்களுக்கு தடை ஏதும் இல்லை: மலேசியா
இந்தியாவிலிருந்து ஆட்களை பணியமர்த்த மலேசிய அரசு தடை விதித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதுபோன்ற உத்தரவு ஒருபோதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அது விளக்கியுள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசத்திலிருந்து எந்த வகையான தொழிலாளர்களையும் இனிமேல் பணியமர்த்துவதில்லை. தற்போது பணியாற்றி வருவோருக்கான ஒர்க் பெர்மிட் முடிந்தவுடன் அவை புதுப்பிக்கப்பட மாட்டாது என்ற முடிவை மலேசிய அரசு எடுத்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது.
இந்த செய்தியை மலேசிய உள்துறை அமைச்சர் ரட்ஸி ஷேக் அகமது இன்று திட்டவட்டமாக மறுத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் இதுபோன்ற எந்த உத்தரவையும், முடிவையும் அரசு எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவிலிருந்து இனிமேல் யாரையும் பணிக்கு அமர்த்தக் கூடாது என்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இந்த செய்தியால் மலேசிய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வரும் தொழிலாளர்களை முறைப்படுத்த இந்தியா, மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என இந்திய அரசிடம் மலேசியா தெரிவித்துள்ளதாம்.
இதுகுறித்து மலேசிய பயணத்தை முடித்து விட்டு தாயகம் திரும்பியுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறுகையில், மலேசியாவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களின் நலன் மற்றும் இந்தியாவில் வசிக்கும் மலேசிய மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையிலான இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வேண்டும் என மலேசியா விரும்புகிறது.
எனது மலேசியப் பயணத்தின்போத நான் அந்த நாட்டு பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரை சந்தித்தபோது இதுகுறித்த பேச்சு வந்தது.
மலேசியத் தலைவர்களுடனான எனது பேச்சுவார்த்தை உபயோகரமானதாக இருந்தது.
இந்தியத் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக எந்தத் தகவலையும் மலேசிய அரசு என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
டத்தோ சாமிவேலு மறுப்பு:
முன்னதாக, டெல்லியில் நேற்று தொடங்கிய வெளிநாட்டு இந்தியர்கள் தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மலேசிய தொழில் அமைச்சர் டத்தோ சாமிவேலுவிடம் செய்தியாளர்கள் தடை தகவல் குறித்துக் கேட்டபோது, இதுகுறித்து அறிந்தவுடன் உடனடியாக பிரதமர் படாவி, உள்துறை அமைச்சக செயலாளர் ஆகியோருடன் பேசினேன். ஆனால் அப்படி எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று அவர்கள் மறுத்து விட்டனர்.
இந்த செய்தி உண்மை இல்லை. அப்படி நடக்கவும் நடக்காது. இந்தியத் தொழிலாளர்களுக்கு எப்போதும் போல மலேசியாவில் வரவேற்பு காத்திருக்கிறது என்றார்.
மலேசிய அரசின் இந்த விளக்கத்தால், இந்தியத் தொழிலாளர்களுக்குத் தடை என்ற செய்திக்கு தெளிவு கிடைத்துள்ளது.