கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் மாலத்தீவு அதிபர்
மாலே: மாலத்தீவு அதிபர் மாமூன் அப்துல் கயூமைக் கொல்ல முயன்ற இளைஞரைத் தடுத்து நிறுத்தி அதிபரைக் காத்துள்ளான் 15 வயது சிறுவன்.
ஹோராபுஷி தீவில் உள்ள வடக்கு திலதுன்மதி என்ற இடத்திற்கு கயூம் வந்திருந்தார். அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து அவர் கையசைத்தார்.
அப்போது ஒரு இளைஞர் திடீரென கயூமை நெருங்கி தனது கையில் இருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்த முயன்றார்.
அப்போது அங்கு கூட்டத்தினரை முறைப்படுத்துவதற்காக நின்றிருந்த முகம்மது ஜெய்சாம் என்ற மாணவன், மின்னல் வேகத்தில் அந்த இளைஞனைத் தடுத்து கத்தியைத் தட்டி விட்டான். பின்னர் பாதுகாப்புப் படையினர் விரைந்து அந்த இளைஞனை வளைத்துப் பிடித்தனர்.
சிறுவன் ஜெய்சாமின் சமயோஜித நடவடிக்கையால் கயூம் உயிர் தப்பினார். மாணவன் ஜெய்சாம், சாரணர் அமைப்பில் இருப்பவன். அதிபரின் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் பணியில் அவன் ஈடுபட்டிருந்தான்.
இந்த சம்பவத்தில் கயூம் காயமின்றித் தப்பினார். ஆனால் ஜெய்சாமுக்கு காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்த முன்ற நபரைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை.