கோவில் காவலாளியை கொன்று உண்டியல் பணம் கொள்ளை
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகேயுள்ள முனீஸ்வரர் கோவிலில் காவலாளியைக் கொலை செய்து உண்டியல் பணத்தை கொள்ளை அடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை-கும்பகோணம் சாலையில் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த அறிவழகன் (50) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
தற்போது மார்கழி மாதம் என்பதால் தினந்தோறும் அதிகாலையிலும், லையிலும் கோவிலில் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. நேற்றிரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வாட்ச்மேன் அறிவழகன் கோவில் கருவறை முன்பாக தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், அங்கிருந்த சூலாயுதத்தால் அறிவழகனை குத்தி கொலை செய்துவிட்டனர். பின்னர் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலையில் கோவிலுக்கு பூஜை செய்ய தினகரன் என்பவர் சென்றபோது அறிவழகன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய்களுடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர். கோவில் மெயின் ரோட்டில் இருப்பதால் கொள்ளையர்கள் மிக எளிதாக தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது.
இந்த கோவில் மிகச் சிறியது. வருமானம் கிடையாது. ஆனால் கொள்ளையர்கள் அதிகளவில் பணம், நகை இருக்கும் என்ற எண்ணத்தில் காவலாளியைக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.