தினமலர் அலுவலகம் மீது விடுதலைச் சிறுத்தைகள் தாக்குதல்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி அக்கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தை தாக்கினர்.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பாட்டில்கள், கட்டைகளுடன் வந்து தினமலர்
அலுவலகத்தின் 2 காவலாளிகளை கண்மூடித்தனமாக தாக்கினர்.
பின்னர் நுழைவு வாயிலில் இருந்த ஊழியர்கள் வரவை பதிவு செய்யும் மெஷினை அடித்து நொறுக்கினர். ஆனால் அவர்கள் அலுவலகத்திற்குள் நுழையும் முன்னர் அங்கிருந்த மற்றொரு கேட் மூடப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தையினர் கண்களில் பட்டதையெல்லாம் அடித்து சின்னா பின்னமாக்கினர்.
தொடர்ந்து 10 நிமிடம் அந்த தாக்குதலில் அந்த இடமே பெரும் கலவரம் நடந்த இடம் போல் காட்சியளித்தது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த காவலாளிகள் இருவரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அண்ணாசாலை போலீசார் 2 விடுதலை சிறுத்தையினரை பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த தாக்குதல் குறித்து தினமலர் நிர்வாகம் சார்பில் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் அண்ணா சாலையில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.