முன்னாள் பெண் நிருபரை 2வது கல்யாணம் செய்த ஸ்ரீநாத்
மைசூர்: முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு மைசூரில் டிசம்பர் 13ம் தேதி 2வது கல்யாணம் நடந்துள்ளது. முன்னாள் பெண் நிருபரை மணந்துள்ளார் ஸ்ரீநாத்.
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். ஸ்ரீநாத்துக்கும் ஜோத்ஸனா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர்.
கடந்த 2003ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அம்பயர்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டு தேறி அம்பயர் ஆனார். சர்வதேச போட்டிகளில் அம்பயராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், பத்திரிகைகளிலும் கிரிக்கெட் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதி வந்தார். அப்போது கர்நாடகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான டெக்கான் ஹெரால்டில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த மாதவி பத்ராவளி என்பவருடன் காதல் மலர்ந்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த டிசம்பர் 13ம் தேதி மைசூரில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் திருமணம் குறித்த செய்தியை வெளியிடவில்லை.
இந்நிலையில் கடந்த 8ம் தேதியன்று மைசூர், ஜெயநகரில் உள்ள குசலாம்பா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
இதில் இருவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டும் கலந்து கொண்டனராம். மாதவிக்கும் இது 2வது திருமணமாம்.
இருவருக்கும் இது 2வது திருமணம் என்பதால் இதுகுறித்த செய்திகளை இரு தரப்பும் வெளியிடவில்லை என்று தெரிகிறது.
ஸ்ரீநாத்துடன் காதல் மலர்ந்ததையடுத்து மாதவி ஒராண்டுக்கு முன்பே தனது நிருபர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநாத்துக்கு முதல் கல்யாணம் மூலம் 2 குழந்தைகளும், மாதவிக்கு 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.