For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வள்ளலார் கொள்கைப்படி வாழ்ந்தால் வன்முறை இருக்காது: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

Ramdoss

வடலூர்: வள்ளலாருக்கு விழா எடுத்த நான் இனி என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வடலூரில் வாழ்ந்து முக்தி பெற்ற அருட்பெரும்ஜோதி வள்ளலார், தமிழ் மொழிதான் உலகின் சிறப்பியல் மொழி என்பதை 150 ஆண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டியவர். மேலும் உலக மொழிகளுள் சந்தங்களை உள்ளடக்கிய இசைச் சிறப்பு தமிழுக்கே உண்டு என்பதையும் சான்றுகளுடன் உலகுக்குச் சொன்னவர் வள்ளலார் சுவாமிகள்.

தமிழ் ஒரு உயர்தனிச் செம்மொழி என்று நிரூபித்த வள்ளலாருக்கு, பொங்கு தமிழ் பண்ணிசை மன்றம் சார்பில் திரு அருட்பா ஆராதனை விழா புதன்கிழமை வடலூரில் நடந்தது.

வடலூர் சுத்த சன்மார்க்க கல்வி நிலைய வளாகத்தில் உள்ள அருட்செல்வர் பொள்ளாச்சி டாக்டர் நா.மகாலிங்கம் கலையரங்கில் நடந்த இவ்விழாவுக்கு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையேற்றுப் பேசினார்.

அவர் கூறியதாவது:

இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இசை மீண்டும் தனது பொலிவைப் பெற்று வருகிறது. அதற்குக் காரணம் முன்பு ராஜா அண்ணாமலைச் செட்டியார், இப்போது அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் போன்ற பெருமக்கள்தான்.

அவர்களோடு கைகோர்த்து தமிழ் இசையை மீட்டெடுக்கும் முயற்சியில்தான் பொங்குதமிழ் பண்ணிசை மன்றமும் செயல்பட்டு வருகிறது.

தமிழுக்கு ஆதி இசைதான். உலகளவில் அற்புதமானதும் தமிழ் இசைதான். ஆனால் நாம் மட்டுமே விழா எடுத்துக் கொண்டாடுவதால் தமிழ் இசை வளர்ந்துவிடாது. ஒவ்வொருவரும் இதற்கு சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசியலை யாரும் செய்யலாம். இரண்டு பேர் சேர்ந்து ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி விடலாம். ஆனால் முத்தமிழை மீட்டெடுப்பது சாதாரண காரியமல்ல.

வடக்கில் வாழ்ந்த வள்ளலாருக்கும் தென்கோடியில் வாழ்ந்த வைகுண்டசாமிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவருமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்கள். வள்ளலாரின் கொள்கைப்படி எல்லாரும் வாழ்ந்தால் சமுதாயத்தில் வன்முறைக்கே இடமிருக்காது.

பொதுவாகவே, பத்து தினங்களுக்கு ஒருமுறை அசைவம் சாப்பிடும் வழக்கம் எனக்கு உண்டு. வள்ளலாருக்கு, அதுவும் அவரது வடலூரில் விழா எடுத்துவிட்டு, மீண்டும் அசைவத்தைத் தொடுவதற்கு என் மனம் இடம் தரவில்லை. எனவே, இந்த நிமிடத்திலிருந்து நான் அசைவம் சாப்பிட மாட்டேன் என்பதை இங்கே ஒரு உறுதியாக எடுத்துக்க கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக மாற வேண்டும் எனில் வள்ளலார் கொள்கைகள் முமுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனறார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X