சிங்கம்புணரியில் தடையை மீறி நடந்த மஞ்சு விரட்டு-அம்பலகாரர் கைது!
சிங்கம்புணரி: உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நேற்றே மதுரை அருகே உள்ள சிங்கம்புணரியில் தடையை மீறி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளைப் பிடித்தனர்.
தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தடை விதித்து தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், அதை மீறி, சிங்கம்புணரி அருகே மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாகவும், வழக்கமான விறுவிறுப்புடனும் அப்பகுதி மக்கள் நடத்தியுள்ளனர்.
சிங்கம்புணரி அருகே உள்ளது சூரக்குடி கிராமம். இங்கு ஆண்டுதோறும், மார்கழி கடைசி வெள்ளிக்கிழமையன்று ஊர் கூடி கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள். அன்றைய தினம் மஞ்சு விரட்டு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்றும் மஞ்சு விரட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை சுட்டிக் காட்டி மஞ்சு விரட்டை நடத்த வேண்டாம் என போலீஸார் சூரக்குடி கோவில் விழாக் கமிட்டியினரிடம் தெரிவித்தனர்.
ஆனால் அதை அவர்கள் நிராகரித்து விட்டனர். திட்டமிட்டபடி மஞ்சு விரட்டு நடந்தது. 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. வழக்கமான விறுவிறுப்புடன் மஞ்சு விரட்டு நடந்ததாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
தடையை மீறி நடந்த மஞ்சு விரட்டு குறித்து உயர் அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீஸார் தகவல் அனுப்பியுள்ளனராம்.
எழுதிக் கொடுத்த அம்பலகாரர்கள்:
முன்னதாக உச்சநீதிமன்ற தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த மாட்டோம் என போலீசாரிடம் சூரக்குடி அம்பலகாரர் மற்றும் ஊர் பிரமுகர்கள் 4 பேர் எழுதிக் கொடுத்தனர்.
ஆனால் அதையெல்லாம் மீறி நேற்று மதியம் 2 மணிக்கு 100 காளைகளுடன் மஞ்சு விரட்டு நடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தனர்.
சூரக்குடியில் அம்பலகாரர் கைது:
தடையை மீறி சூரக்குடியில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் இன்று காலை 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக நுழைந்து மஞ்சுவிரட்டு நடத்தமாட்டோம் என்று எழுதிக் கொடுத்த ஊர் அம்பலகாரர் மெய்யப்பன்(65), ஊர் பிரமுகர்களான உத்தமபுத்திரன்(62) மற்றும் அன்பு(48) ஆகியோரை கைது செய்து திருப்பத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
கடும் பதட்டம், போலீஸ் குவிப்பு:
அம்பலகாரர் மற்றும் ஊர் பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த ஊர்மக்கள் பஸ் மறியல் போராட்டம் மற்றும் காவல் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதால் அங்கு கடும் பதட்டம் நிலவுகிறது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.