முதியவரிடம் லஞ்சம் - அரசு டாக்டர் மீது புகார்
திருநெல்வேலி: ஆதரவற்றோர் பென்சன் பெறுவது தொடர்பான வயதுச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்டதாக அரசு டாக்டர் மீது அதிமுக பிரமுகர் குற்றம் சாட்டியுள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியலில் ஈடுபட போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆதரவற்ற முதியவர்களுக்கு அரசு இந்திரா காந்தி நினைவு முதியோர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் படி 64 வயது நிரம்பிய ஆண்களுக்கும், 61 வயது நிரம்பிய பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு அவர்களது வயதை சரி பார்த்து அரசு டாக்டர் கையெழுத்து போட்டு சான்றிதழ் கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் இந்த தொகை கிடைக்கும்.
நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தை சேர்ந்த ஆதரவற்றோர் நான்கு பேர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அவர்களை அதிமுக மேடைப் பேச்சாளார் மின்னல் மீனாட்சி அழைத்து சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் கையெழுத்து போட்டு தர ஆளுக்கு தலா ரூ.30 தர வேண்டும் என்று கேட்டுள்ளார். வந்தவர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுபவர்கள். அவர்களிடம் போய் பணம் கேட்கிறீர்களே என்று மின்னல் மீனாட்சி கேட்டிருக்கிறார்.
ஆனால் பணம் தராமல் கையெழுத்து போட்டு தர முடியாது என டாக்டர் கண்டிப்புடன் கூறியதால் ஏமாற்றத்துடன் அந்த நான்கு பேரும் திரும்பி விட்டனர்.
கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.