தண்டவாளத்தில் விரிசல்-தப்பியது வைகை எக்ஸ்பிரஸ்
மதுரை: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், மதுரையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்திலிருந்து தப்பியது.
திண்டுக்கல்லுக்கும், கொடைரோட்டிற்கும் இடையே அமைந்துள்ள அம்பாத்துரை பெருமாள்-கோவில்பட்டி கிராமங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
தண்டவாளத்தை தினமும் ஆய்வு செய்யும் ஊழியர்கள் இதை கவனித்து உடனே ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனே தெரிவித்தனர்.
இதற்கிடையே மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை எக்ரஸ்பிரஸ் ரயில் நேற்று காலை கிளம்பி கொடை ரோடு ரயில்வே நிலையத்தை அடைந்துவிட்டது.
இதையடுத்து ரயிலை அங்கேயே நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். ரயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை சரி செய்த பின்னர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
ரயில் தண்டவாள விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெரிய விபத்திலிருந்து தப்பியது.