ஆம்னி 'அடாவடி' அமோகம்: நெல்லை டூ சென்னைக்கு ரூ. 700!
நெல்லை: பொங்கல் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, நெல்லையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 58 சிறப்பு பஸ்களும், 308 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் அளவுககு அதிகமாக கூட்டம் அலை மோதுவதால் பலரும் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர். இவற்றை கணக்கில் கொண்டு ஆம்னி பஸ்களில் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றி வருகின்றன.
நெல்லையில் இருந்து சென்னை, கோவை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சாதாரண சமயங்களில் சென்னை செல்ல 400 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தற்போது ஆம்னி பஸ்களில் ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை அடைந்துள்ளனர்.