புதைக்கப்பட்ட சிசுவை தோண்டி எடுத்துக் குதறிய நாய்கள்
சென்னை: சென்னை எழும்பூரில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிறந்து 10 நாட்களே ஆன பெண் சிசுவின் உடலை நாய்கள் தோண்டி எடுத்துக் குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் ரயில்வே பாலம் உள்ளது. இந்தப் பாலத்திற்கு அருகே உள்ள குப்பை மேட்டுப் பகுதியில் சில நாய்கள் எதையோ தோண்டி குதறிக் கொண்டிருந்தன.
அதை சாலையில் சென்றவர்கள் என்ன என்று பார்த்தபோது ஒரு பெண் சிசுவின் உடலைத்தான் நாய்கள் குதறிக் கொண்டிருந்தன என்று தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து சென்று அந்த சிசுவின் உடலை மீட்டனர். அக்குழந்தை பிறந்து 10 நாட்கள்தான் ஆகியிருக்கும் எனத் தெரிகிறது. தவறான தொடர்பால் பிறந்த குழந்தையாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. எழும்பூர் பேபி மருத்துவமனையில் இக்குழந்தை பிறந்திருக்கக் கூடும் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தையை இங்கு புதைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.