'கருணாநிதி கைது புகழ்' முத்துக்கருப்பனுக்கு மீண்டும் பதவி
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவரும், கடந்த 4 ஆண்டுகளாகவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவருமான ஐஜி முத்துக்கருப்பன் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை மாநக காவல்துறை ஆணையராக இருந்தவர் முத்துக்கருப்பன்.
(இவரை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்ததே முதல்வராக இருந்த கருணாநிதி தான் என்பது குறிப்பிடத்தக்கது)
அதன் பின்னர் ஜெயலலிதாவுடன் இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. 2003ம் ஆண்டு இவரை சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா.
பின்னர் வந்த திமுக ஆட்சியில் முத்துக்கருப்பன் அவர் பதவி எதுவும் வழங்கப்படாமல் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஒரு முறை முதல்வர் கருணாநிதியை நேரிலும் போய் பார்த்து கண்கலங்கிவிட்டு வந்தார். ஆனாலும் பதவி தரப்படவில்லை.
இந் நிைலயில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு இப்போது கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைக் கண்காணிப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் சில அதிகாரிகளும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏடிஜிபி ராமானுஜம் சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஏடிஜிபியாக நியிமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சென்னை நகர ஆணையர் நடராஜன், போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநருக்கான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி (எஸ்.பி.) அஷ்வின் கோத்னிஸ், நாகை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் 9வது பட்டாலியன் (மணிமுத்தாறு) கமாண்டன்ட் ஆக தமிழ்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகை எஸ்.பியாக இருந்த கல்பனா நாயக் காலியிடப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.