டாடாவுக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லும்!
கொல்கத்தா: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரூ. 1லட்சம் மதிப்பிலான டாடா நானோ கார் தயாரிப்புக்காக, மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நிலம் கையகப்படுத்தியது செல்லும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் கனவுத் திட்டமான சிறிய ரக காரான டாடா நானோ சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரின் தயாரிப்பை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் மேற்கொள்ள டாடா நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக மேற்கு வங்க அரசு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குத் தேவையான 1000 ஏக்கர் நிலத்தை கடந்த ஆண்டு கையகப்படுத்தியது.
இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் 11 வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இந்த வழக்க விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜார், நீதிபதி பி.கே.கோஷ் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா நானோ கார் தயாரிப்புக்கு இருந்து வந்த பெரிய சிக்கல் தீர்ந்துள்ளது.
ரூ. 1லட்சம் மதிப்பிலான நானோ கார் வருகிற செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கூர் தவிர மேலும் 3 இடங்களில் இதன் உற்பத்தியை மேற்கொள்ள டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.