மாணவியுடன் தலைமறைவான மதபோதகர்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே மதபோதகர் ஒருவர் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தலைமறைவாகிவிட்டார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரிய கோவிலான்குளத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் கலைச்செல்வன். இவர் மதுரையில் மதபோதகர் கல்வி பயின்று வருகிறார்.
கலைச்செல்வனும் மாரியப்பன்-ராமலெட்சுமி தம்பதியின் மகள் செல்வியும் 16)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளனர். மாரியப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு நிலவியது. இந் நிலையில் கலைச்செல்வன் பள்ளிக்கு சென்று திரும்பிய செல்வியை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
பள்ளிக்கு சென்ற மகள் திரும்பி வராததால் தாய் ராமலட்சுமி உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந்நிலையில் கலைசெல்வன்தான் அவரை கடத்தி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் கலைசெல்வனின் வீட்டிற்கு ராமலட்சுமி புகார் கூறவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே கடந்த 10ம் தேதி அவர் சின்னகோவிலான்குளம் போலீசில் ராமலட்சுமி புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலை கழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வியின் உறவினர்கள் சின்னகோவிலான்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கலைச்செல்வனிடம் இருந்து செல்வியை மீட்டு தரும்படி கூறினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.