மாமூல் தராத ரேஷன் ஊழியர்களுக்கு அடி-போராட்டம் அறிவிப்பு
திருநெல்வேலி: ரேசன் கடை ஊழியர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை உடனடியாக கைது செய்ய கோரி நெல்லை மாவட்ட ரேஷன் ஊழியர்கள் ஒருநாள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் கூட்டுறவு பதிவாளர் சுடலைகண்ணுவின் மகன் முருகேசன். இவர் மீது கொலை உள்பட பல குற்றவியல் வழக்குகள் உள்ளன. தற்போது அவர் ரேசன் கடைகளில் மாமூல் கேட்டு தகராறு செய்வது, தர மறுக்கும் ஊழியர்களை தாக்குவது, ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற சமுகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
சம்பவதன்று பாளையங்கோட்டை சாந்தி நகர் ரேஷன் கடையில் மாயாண்டி, மணிராஜகோபால் ஆகியோரிடம் மாமூல் கேட்டு தாக்கியுள்ளார். இதுகுறித்து பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அவர்களை கைது செய்யாததால் அவர்கள் மீண்டும் ரேஷன் ஊழியர்களை தாக்கியுளளார்.
எனவே குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும், மாமூல் கேட்டு அச்சுறுத்தும் சமுக விரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் வரும் 22ம் தேதி ரேஷன் கடைகளை ஒருநாள் அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏஐசிசிடியு அலுவலகத்தில் நடந்த மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.