பணத்துக்காக 21 கொலைகள்.. சீரியல் கில்லர் குடும்பத்தோடு கைது
பெங்களூர்: பெங்களூரில் பணத்துக்காக 21 கொலைகள் செய்து தலைமறைவாக இருந்த நபர் 30 ஆண்டுகளுக்கு பின் போலீசில் குடும்பத்துடன் பிடிபட்டுள்ளார்.
இந்தக் குடும்பம் மேலும் பலரையும் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூர், கெம்பே கவுடா நகரை சேர்ந்தவர் ராகவன் (62). ஓய்வு பெற்ற என்ஜீனியரான இவர் ஹென்னூர் எச்.பி.ஆர் லே-அவுட்டில் உள்ள தனது வீட்டை சந்திரகாந்த் சர்மா (48) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
சந்திரகாந்த், தனது மனைவி ஹர்ஷா, மகன் மண்டோ சர்மா ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 9ம் தேதி சந்திரகாந்த் வீட்டுக்கு வாடகை வாங்கச் சென்ற ராகவன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராகவனின் மகன் மாதவன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ராகவனை தேடி வந்த நிலையில், கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அது காணாமல் போன ராகவன் எனத் தெரிய வந்தது.
உடனே கெம்பேகவுடா நகர் போலீசார் ராகவன் இறந்தது குறித்து அவரது வீட்டில் குடியிருக்கும் சந்திரகாந்த் சர்மாவிடம் சாதாரணமாக விசாரித்தனர்.
ஆனால், சந்திரகாந்த் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, அவருடைய வீட்டை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது ராகவனுக்கு சொந்தமான வீட்டுக்குரிய ஆவணங்களை போலியாக தயாரித்து அவருடைய மகன் மாதவனின் கையெழுத்தையும் போலியாக போட்டு தயார் செய்யப்பட்டிருந்த பத்திரம் சிக்கியது.
சந்திரகாந்த் மகா மோசடி பேர்வழி என்பதை உணர்ந்த போலீசார், அவரது மனைவி ஹர்ஷா, மகன் மண்டோ சர்மா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது ராகவனை கொலை செய்ததை சந்திரகாந்த் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். அதிர்ச்சியடைந்த போலீசார் இவர்களிடம் மிகத் தீவிரமாக பல தகவல்களை கொட்டினர்.
ராகவனுக்கு சொந்தமான வீட்டை போலி பத்திரம் தயாரித்து ரூ. 1.5 கோடிக்கு ஒருவருக்கு விற்று அதற்கு முன் தொகையாக ரூ.50 லட்சம் அட்வான்சும் வாங்கியுள்ளார் சந்திரகாந்த்.
இது தவிர பெங்களூர் உட்பட பல இடங்களில் போலியாக பத்திரங்கள் தயாரித்து ஏகப்பட்ட நிலங்களை விற்று அதன் மூலம் இதுவரை ரூ.15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெரிய மோசடி குடும்பம் என்றரீதியில் இவர்களை விசாரித்த போலீசாருக்கு இவர்கள் மேலும் பல கொலைகளையும் செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் தட்டவே, அவர்களை லாக்-அப்புக்கு கொண்டு சென்று முறைப்படி கவனித்தனர்.
அப்போது தான் இவர்களது சீரியல் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
21 கொலைகள்..
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரை சேர்ந்த சந்திரகாந்த் பணத்துக்காக கடந்த 1978ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை 20 கொலைகளை செய்துள்ளான் எனத் தெரியவந்தது.
எல்லா கொலைகளையும் நாசிக்கில் தான் செய்துள்ளான்.
அதன் பின்னர் பெங்களூருக்கும் இடம் மாறி வந்து ரியல் எஸ்டேட் தொழிலை ஆரம்பித்துள்ளான். அதில் பலரை ஏமாற்றியுள்ளான்.
தான் வாடைகைக்கு இருந்த வீட்டையும் போலி ஆவணம் கொண்டு விற்க முடிவு செய்தபோது தான் வீட்டின் உரிமையாளர் ராகவன் தடையாக வந்து நிற்கவே அவரையும் கொலை செய்துள்ளான்.
அவரது இந்த கொலைகளுக்கு மனைவியும், மகனும் துணையாக இருந்ததாகத் தெரிகிறது.
இந்தக் கும்பல் மேலும் பலரைக் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.