பாமக து.பொதுச் செயலாளர் வீட்டில் குண்டு தயாரிப்பு
மதுரை: மதுரை பெருங்குடியில் உள்ள மாநில பாமக துணைப் பொதுச் செயலாளர் இளஞ்செழியனின் தோட்டத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. உறவினரைக் கொன்றவர்களைப் பழி வாங்க அவர் வெடிகுண்டுகள் தயாரித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மதுரை பெருங்குடியில் உள்ள இளஞ்செழியனின் பண்ணை வீட்டில், வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக, சோளங்குருணி கிராம நிர்வாக அதிகாரி நாராயணனுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் போலீஸாருடன் அங்கு சென்றார். இளஞ்செழியனின் பண்ணை வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு காயங்களுடன் காணப்பட்ட மாரீஸ்வரன் (25), பெரியசாமி (23) ஆகியோர் இருந்தனர்.
இருவரிடமும் விசாரித்தபோது, இளஞ்செழியனின் பண்ணை வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. சமீபத்தில் இளஞ்செழியனின் உறவினர் அன்பு என்பவர் கொல்லப்பட்டார். இதற்குப் பழி வாங்குவதற்காக இளஞ்செழியன் தனது பண்ணை வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து வந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில்தான் மாரீஸ்வரனும், பெரியசாமியும் காயமடைந்தனர்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பண்ணை வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி சில நாட்டு வெடிகுண்டுகளையும், வெடிகுண்டு தயாரிக்க உதவும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இளஞ்செழியன், அவரது சகோதரர்கள் இருளப்பன், செல்வம், மணி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.