சேது சமுத்திர திட்டத்தில் அதிமுக மாபெரும் துரோகம்-தி.க.
சென்னை: சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் தமிழக மக்களுக்கு அதிமுக மாபெரும் துரோகம் செய்து வருவதாக கி.வீரமணி தலைமையில் நடந்த தி.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சேது சமுத்திர திட்டக்கால்வாய் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
தமிழகத்தின் வளம், முன்னேற்றம், தென் மாவட்டங்களின் வளர்ச்சி, இந்திய பொருளாதார மேம்பாட்டு, கடலோர பாதுகாப்பு ஆகியவைகளை உள்ளடக்கிய, தமிழர்களின் 150 ஆண்டுகால கனவான சேதுசமுத்திரக் கால்வாய் திட்டத்தின் பணிகள் மிக வேகமாக நடைபெற்று 2008ம் ஆண்டு முடிவடையக்கூடும் என்ற நிலை உள்ளது.
இந்த திட்டத்தால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இதனால் பெருமை வந்துவிடுவதுடன் 2009ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக பாதகமாக அமையக்கூடும் என்பதால், ராமர் சேது என்ற ஆதாரமற்ற ஒன்றை வைத்து, மக்களின் மத நம்பிக்கையை முன்வைத்து, திட்டத்தை தடுத்து நிறுத்த நீதிமன்றங்கள் வரை சென்றுள்ளனர்.
மத்திய அரசு மேலும் கால அவகாசம் கோராமல், உச்சநீதிமன்றத்தில் தக்க முறையில் வழக்கினை நடத்தி முடித்து நிறுத்தப்பட்ட பணிகள் மேலும் தொய்வின்றித் தொடர அனைத்து முயற்சிகளையும் விரைந்து எடுக்க வேண்டுமென்று மத்திய அரசினை இக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
சேது சமுத்திர திட்டம் அடியோடு கைவிடப்பட வேண்டும் என்று அறிவிக்கும் நிலைக்கு அதிமுகவின் நிலைப்பாடு சென்றுவிட்டது.
அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு அண்ணாவின் விருப்பத்திற்கு விரோதமாகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் நடந்துவரும் அதிமுகவின் நிலையை இக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
முதலில் வழித்தடத்தை மாற்றிட வேண்டும் எனத் தொடங்கி, பிறகு திட்டமே கூடாது என்று கூறுவது தமிழ்நாட்டுக்கு அதிமுக செய்யும் மாபெரும் துரோகம் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் இக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
பாதுகாப்புக் குழுவின் சார்பில் ராமநாதபுரத்தில் ஓர் எழுச்சி விளக்க பொதுக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி தலைமையில், குழுவின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளும் விதத்தில் வரும் பிப்ரவரி மாதம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.