தமிழகத்திடம் அரிசி, மாடுகள் கேட்கும் கேரளா
சென்னை: அரிசி, கறவை மாடுகள், பருப்பு, பாமாயில் உள்ளிட்டவற்றை கேரளாவுக்கு வழங்குமாறு அம்மாநில உணவுத் துறை அமைச்சர் திவாகரன், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வறட்டுப் பிடிவாதமாக இருந்து வரும் கேரளா, தமிழகத்திடம் பல்வேறு உதவிகளை கேட்டு பெரிய பட்டியலையே கொடுத்துள்ளது.
சென்னைக்கு வந்த கேரள மாநில உணவுத் துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் திவாகரன், நேற்று கால்நடைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை அவர்களிடம் வைத்தார்.
அதன்படி, அரிசி, பருப்பு, தானியம், பாமாயில், கறவை மாடுகள் ஆகியவற்றை தமிழக அரசு, கேரளாவுக்கு தந்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் திவாகரன்.
இந்தக் கோரிக்கைகளில் கறவை மாடுகளைத் தர தமிழக அரசு ஒத்துக் கொண்டுள்ளதாம். அரிசி கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என உணவுத்துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளாராம்.
இதுதவிர கேரளாவில் அரசு கால்நடைப் பல்கலைக்கழகம் அமைக்கத் தேவையான உதவிகளைச் செய்யவும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் திவாகரன்.
தற்போது கேரளாவில் உள்ள கறவை மாடுகள் தினசரி 5 முதல் 6 லிட்டர் பால்தான் கொடுக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள கறவை மாடுகள் 15 முதல் 18 லிட்டர் பால் வரை கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழக அரசும் பால் உற்பத்திக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதால், பால் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு நிலையில் உள்ளது. மேலும், தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, நாமக்கல், கரூர், சேலம், கோவை, பல்லடம் ஆகிய பகுதிகளில் கோழிப்பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதை மனதில் கொண்டே தமிழகத்தின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.